அம்மாபேட்டை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது

அம்மாபேட்டை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-24 00:20 GMT
அம்மாபேட்டை, 

அம்மாபேட்டை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாணவி கடத்தல்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி பொதுத்தேர்வு எழுத பள்ளிக்கூடத்துக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மாணவியின் தந்தை அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர், அம்மாபேட்டை குருவரெட்டியூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் பிரபு என்கிற பிரபாகரன் (வயது 22) என்பவர் ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாகவும், மகளை மீட்டு தரக்கோரியும் கூறிஇருந்தார். இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற பிரபாகரனை தேடி வந்தனர்.

போக்சோ சட்டம்

இந்தநிலையில் குருவரெட்டியூரில் உள்ள ஒரு வீட்டில் பிரபாகரன் இருப்பதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது பிரபாகரனும், மாணவியும் இருந்தனர். இதைத்தொடர்ந்து பிரபாகரனை கைது செய்த போலீசார், அந்த மாணவியை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவி பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளதால், பிரபாகரன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கைதான பிரபாகரன் பவானி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்