சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-05-26 04:10 GMT
சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் மெய்யப்பன் மகன் அர்ச்சுனன் (வயது 35), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வளையாம்பட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். பழையனூர் காத்தான்குட்டை அருகே வந்த போது, விரியூரில் இருந்து பரமநத்தம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அர்ச்சுனன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பரமநத்தம் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி மகன் இளங்கோவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அர்ச்சுனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்