திருப்பூரில் இருந்து ஒடிசா, பீகார், உத்தரபிரதேசத்திற்கு 3 சிறப்பு ரெயில்களில் 4,800 தொழிலாளர்கள் பயணம்

திருப்பூரில் இருந்து ஒடிசா, பீகார், உத்தரபிரதேசத்திற்கு 3 சிறப்பு ரெயில்கள் நேற்று இயக்கப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 800 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.

Update: 2020-05-27 01:04 GMT
திருப்பூர், 

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 6 லட்சம் பேர் ஆவார்கள். வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர். கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 4-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ்களில் சென்று விட்டனர். ஆனால் கொரோனா பாதிப்பின் காரணமாக ரெயில் சேவை இல்லாததால், வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தனர்.

சிறப்பு ரெயில்கள்

மேலும், பலர் உணவுகளும் கிடைக்காமல் சிரமத்தை சந்தித்து வந்தார்கள். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களின் இந்த நிலை பலரிடமும் பரிதாபத்தை ஏற்படுத்தி வந்தது. இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகிற வடமாநில தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

4,800 பேர் சொந்த ஊர்களுக்கு...

இந்த நிலையில் திருப்பூரில் இருந்து நேற்று ஒடிசா மாநிலம் பலாங்கீர் வரை, பீகார் மாநிலம் முஜாப்பூர் நகர் வரை, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் வரை என மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 8 மணி என 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் ஒரு ரெயிலில் 1,600 பேர் என 3 ரெயில்களில் மொத்தம் 4,800 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பதிவு செய்த தொழிலாளர்கள் மட்டுமே ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக இதில் பயணம் செய்ய வந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் போன்றவைகளும் வழங்கப்பட்டது. பதிவு எண் படி ஒவ்வொருவரும் தனித்தனியாக அந்தந்த இடங்களில் அமரவைத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்