கூடுவாஞ்சேரி அருகே தொழிலாளி கொலை வழக்கில் நண்பர் உள்பட 5 பேர் கைது - மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் கொலை செய்ததாக வாக்குமூலம்

கூடுவாஞ்சேரி அருகே தொழிலாளி கொலை வழக்கில் நண்பர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் கொலை செய்ததாக அவரது நண்பர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2020-06-01 23:46 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள தைலாவரம் ரெயில்வே தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் நடத்திய விசாரணையில்:-

கொலை செய்யப்பட்ட நபர் சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 33), என்பதும், அவர் மீது சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் சமீபத்தில் ஒரு வழக்கில் சிறைக்கு சென்றபோது அங்கு இருந்த கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் நண்பராக பழகி உள்ளார்.

இதன் அடிப்படையில் சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த ரமேஷ், நண்பர் பார்த்திபன் வீட்டில் தங்கியிருந்து அதே பகுதியில் கட்டிட வேலை செய்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் மறைமலைநகர் அருகே நேற்று தனிப்படை போலீசார் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய அவரது நண்பர்களான தைலாவரத்தை சேர்ந்த பார்த்திபன் (30), மணிகண்டன் (23), செல்லமுத்து (21), வசந்த்(19), அஜித் ( 23), ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். ரமேஷின் நண்பர் பார்த்திபன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நானும் கொலை செய்யப்பட்ட ரமேஷும் சிறையில் இருக்கும் போது நண்பர்களாக பழகி வந்தோம், இதன் காரணமாக ரமேஷ் சமீப காலமாக எனது வீட்டில் தங்கி அதே பகுதியில் கட்டிட வேலைகளை செய்து வந்தார்.

ஒரு வாரத்துக்கு முன்பு ரமேஷ் குடிபோதையில் எனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனை நான் கண்டித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் மது குடித்துவிட்டு மீண்டும் என்னுடைய மனைவியிடம் தவறாக நடக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த நான் ரமேஷ் மது குடித்து கொண்டிருந்த தைலாவரம் ரெயில்வே தண்டவாளம் அருகே எனது நண்பர்கள் மணிகண்டன், செல்லமுத்து, வசந்த், அஜித் ஆகியோருடன் சென்று ரமேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஒடிவிட்டோம். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்