வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்

வியாபாரிகள் தாங்கள் தொழில் செய்யும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-06-04 05:52 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கை கழுவும் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். வியாபாரிகள் தாங்கள் தொழில் செய்யும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசங்களை அணியவும், கை கழுவும் பழக்கத்தை கடைபிடிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

முன்னதாக கடலூர் வியாபாரிகள், கோ-ஆப்டெக்ஸ் எதிரில் கடைகள் போட போதிய பாதுகாப்பு இல்லை. ஆகவே மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு மாற்ற அனுமதிக்க வேண்டும். அதில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றனர். இதை கேட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

சிதம்பரம், பண்ருட்டி மார்க்கெட் சங்க நிர்வாகிகள், ஏற்கனவே இருந்த இடத்திலேயே மார்க்கெட் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் மறுத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பேசுகையில், அனைத்து கடைகளிலும் கைகளை சோப்பு போட்டு கழுவும் வகையில், தொட்டி அமைக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே கூட்டத்திற்கு பிறகு திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பான்பரி மார்க்கெட் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கியதால் அங்கு செயல்பட்டு வந்த மார்க்கெட்டை கோ-ஆப்டெக்ஸ் எதிரே மாற்றி உள்ளனர். ஆனால் அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை. விபத்து ஏற்படும் பகுதியாக இருக்கிறது.

ஆகவே பான்பரி மார்க்கெட் வியாபாரிகளை பஸ் நிலையம் அருகில் உள்ள சைக்கிள் நிறுத்துமிடம் அல்லது ரெயில் நிலையம் அருகில் கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு மாற்றக்கூடாது என்றனர்.

மேலும் செய்திகள்