கடையநல்லூர் அருகே பயங்கரம்: டீக்கடைக்காரர் வெட்டிக்கொலை - உறவினர் கைது

கடையநல்லூர் அருகே டீக்கடைக்காரர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-07 22:45 GMT
அச்சன்புதூர்,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா காசிதர்மம் கிராமம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 65). இவர் கடையநல்லூர் புதிய பஸ்நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கும், அவருடைய தம்பி குடும்பத்துக்கும் இடையே வீட்டின் பொது சுவர் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சுடலைமுத்து தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய தம்பி மகன் கேப்டன் என்ற மாடசாமிக்கும் (40), அவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மாடசாமி, அரிவாளால் சுடலைமுத்துவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சுடலைமுத்துவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுடலைமுத்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே சம்பவ இடத்தில் இருந்து தப்ப முயன்ற மாடசாமியை ஊர் பொதுமக்கள் பிடித்து அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தகவல் அறிந்ததும் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டீக்கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சுடலைமுத்துவுக்கு சொர்ணம் என்ற மனைவியும், இசக்கிமுத்து, கருப்பசாமி ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்