ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின.

Update: 2020-06-12 04:49 GMT
ஈரோடு, 

தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்கி உள்ளது. முதலில் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மட்டுமே 50 சதவீதம் அளவில் இயக்கப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் டவுன் பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்கள் மொத்தம் 262 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சில வழித்தடங்களில் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே பஸ்கள் செல்கின்றன. நகர் பகுதிகளில் அவ்வப்போது பஸ்கள் சென்று வருகின்றன. பஸ்கள் ஓடத்தொடங்கியது முதல் பொதுமக்களும் தங்கள் உறவினர்கள் வீடுகள், ஆஸ்பத்திரிகள், சந்தை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லவேண்டிய இடங்களுக்கு பஸ்களில் சென்று வருகிறார்கள். இதனால் சில நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்தும், சில நாட்கள் பொதுமக்கள் வருகை இன்றியும் காணப்படுகிறது.

தனியார் பஸ்கள்

இந்தநிலையில் தனியார் பஸ்களையும் 60 சதவீத பயணிகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் முதல் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. சுமார் 2 மாதங்களுக்கு பின்னர், தனியார் பஸ்கள் நேற்று ஈரோடு பஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த ஒரு வாரகாலமாக அரசு பஸ்கள் மட்டுமே இயங்கி வந்த சூழலில் தனியார் பஸ்களும் வந்ததால் நேற்று பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. தனியார் பஸ்கள் ஒவ்வொரு முறை சென்று வந்ததும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுவதாக நிர்வாகி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்