தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து கிளனர் சாவு - டிரைவர் படுகாயம்

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து இடிபாடுகளில் சிக்கி கிளனர் பலியானார். இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2020-06-12 21:45 GMT
நல்லம்பள்ளி,

குஜராத் மாநிலத்தில் இருந்து கண்ணாடி பாரம் ஏற்றி கொண்டு ஒரு சரக்கு லாரி கோவைக்கு புறப்பட்டது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த டிரைவர் கோவிந்தன் (வயது 43) என்பவர் ஓட்டி வந்தார். கிளனராக விக்னேஷ் (23) என்பவர் உடன் வந்தார். இந்த லாரி நேற்று தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவர் மீது லாரி மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர், கிளனர் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிளனர் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். டிரைவர் கோவிந்தனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் ரோந்து படையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்