வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.

Update: 2020-06-20 23:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது குறித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தொழில் நிறுவனங்களுக்கு உருவாக்கப்பட்ட மென்பொருள் பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் திறமையான வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்களை இணையம் வழியாக இணைப்பதற்கு தமிழக முதல் அமைச்சர் https://www.tnp-r-iv-at-e-j-obs.tn.gov.in என்ற இணையதள முகவரியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தனியார் துறையில் பணிபுரியும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக இந்த இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதனை தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தகுதியான நபர்களை இணையதளம் வழியாக தேர்வு செய்யலாம்.

இணையதளத்தில் பதிவேற்றம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், வேலை தரும் நிறுவனங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அரசு அறிவித்த ஊரடங்கினால் தொழிலாளர்கள் புலர் பெயர்தலும், ஏற்றுமதி சந்தை மூடப்பட்டதாலும் பொருளாதார மந்தத்தினால் நலிவடைந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலனுக்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அவசர கால கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் பிணையில்லாமல் 20 சதவீத கூடுதல் மூலதன கடன் தொகையும், நலிவடைந்த நிறுவனங்களுக்கான கடன் பங்கு தொகையும் உடனடியாக வழங்க வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், தற்போதைய இக்கட்டமான சூழ்நிலையில் தொழில் நிறுவனங்களின் உற்பத்தியையும், செயல் திறனையும் அதிகரிக்க நான்காம் தலைமுறை தொழில் புரட்சிக்கு வித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் முருகேஷ், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அரிபாஸ்கர் மற்றும் பல்வேறு வங்கிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்