தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக மழை; ரோடுகளில் வெள்ளம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

Update: 2020-06-26 01:13 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 நாட்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 160.40 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கிருஷ்ணகிரி மற்றும் தளியில் தலா 30 மில்லி மீட்டர் மழைஅளவு பதிவாகியுள்ளது. அதே போல், தேன்கனிக்கோட்டையில் 25 மில்லி மீட்டர், சூளகிரி 23, பாரூர் 18, போச்சம்பள்ளி 15.40, நெடுங்கல் 10.20, ஓசூர் 7, ஊத்தங்கரை 1.60 என மாவட்டம் முழுவதும் 160.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருந்தது.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 92 கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 176 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 148 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் கருமேகங்கள் திரண்டு ஆங்காங்கே மழை பெய்தது. பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணிநேரம் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. தர்மபுரியில் ஆங்காங்கே தூறல் மழை பெய்தது.

மேலும் செய்திகள்