கிரிக்கெட் விளையாட்டில் தகராறு; பெண் அடித்துக்கொலை கணவன்-மனைவி-மகன் மீது வழக்கு

பட்டுக்கோட்டை அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பெண் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கணவன்-மனைவி-மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-06-28 01:32 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கார்காவயல் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 55). விவசாய கூலி தொழிலாளி. அவருடைய மனைவி சுந்தரி(50). மகள்கள் சண்முகப்பிரியா(24), கவுசல்யா(23), சந்தியா(22), பவுசியா(21). மகன் வசந்தசேனன்(19). இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் குபேந்திரன்(60), விவசாயி. அவருடைய மனைவி சரோஜா(55 ), மகன் குருபிரபு(28).

நேற்று முன்தினம் மாலையில் வீட்டிற்கு அருகில் வசந்தசேனன், குருபிரபு ஆகிய இருவரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வசந்தசேனனை, குருபிரபு தாக்கியதாக தெரிகிறது.

அடித்துக்கொலை

இதனை அறிந்த வசந்தசேனனின் சகோதரிகள் சண்முகப்பிரியா உள்பட 4 பேரும், வசந்தசேனனும், குருபிரபு வீட்டிற்கு சென்று குருபிரபுவிடம் கேட்டனர். இதனால் சண்முகப்பிரியாவின் சகோதரிகளுக்கும், குருபிரபுவின் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அரிவாள், மண்வெட்டி, உருட்டுக்கட்டைகளால் தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதலில் சண்முகப்பிரியா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வசந்தசேனன், கவுசல்யா, சந்தியா, பவுசியா ஆகிய 4 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கணவன்-மனைவி-மகன் மீது வழக்கு

இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் உத்தரவின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர், குபேந்திரன் மற்றும் அவரது மனைவி சரோஜா, மகன் குருபிரபு ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதும், இந்த மோதலில் பெண் அடித்துக்கொல்லப்பட்டதும் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்