சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 100 படுக்கைகள் கண்காணிப்பு அதிகாரி தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 100 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மகேசன் காசிராஜன் கூறினார்.

Update: 2020-06-28 04:23 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு அதிகாரியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை வந்த அவர், நேற்று சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ அலுவலர் டாக்டர் மீனா மற்றும் சுகாதாரத்துறை கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அரவிந்த்ஆதவன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

அதன் பின்னர் அவர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு மிக குறைவாகத்தான் உள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு மருத்துவக் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை வழங்கி வருவதுடன் போதிய அளவு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கு ஏற்ப சிகிச்சை வழங்க சிவகங்கை பழைய அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு தற்போது அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

முககவசம் கட்டாயம்

மேலும் 100 படுக்கை வசதிகள் அங்கு அமைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு மற்ற சிகிச்சைகள் வழங்க ஏதுவாக அமையும். இதேபோல் காரைக்குடி அமராவதிபுதூரில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு மையம் மற்றும் வட்டார அளவில் 18 கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் நோய் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொருவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்துதான் வெளியே சென்று வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சிவகங்கை பழைய அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் சிகிச்சை பெற்று வரும் வளாகத்தை பார்வையிட்டதுடன், மேலும் கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு பணிகள் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அமராவதிபுதூரில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்