தர்மபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 7 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2020-06-29 02:27 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கல்லூரி மாணவி உள்பட 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டியை சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடைய சகோதரர்கள் 2 பேர் ஜவுளி வியாபாரம் தொடர்பாக பெங்களூரு சென்றனர். இதேபோல தர்மபுரி நகரை சேர்ந்த 28 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவரும் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரிக்கு வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. தர்மபுரி நகரை சேர்ந்த 32 வயது தனியார் நிதி நிறுவன ஊழியர். கடன் தொகை வசூலிக்க கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டு தர்மபுரிக்கு வந்தார். இவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கல்லூரி மாணவி

இதேபோல தர்மபுரி குமாரசாமிப்பேட்டை கோவில் அர்ச்சகரின் 39 வயது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இவரது கணவரான அர்ச்சகர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அர்ச்சகரின் குடும்பத்தினர் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாப்பாரப்பட்டியை சேர்ந்த கோவில் அர்ச்சகரின் மகளான 18 வயது கல்லூரி மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் தர்மபுரி நேரு நகரை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்