நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-07-08 22:30 GMT
சேரன்மாதேவி, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உதவித்தொகை

வீரவநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கண்களைக் கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேரன்மாதேவி ஒன்றிய மாற்றுத்திறனாளி சங்க தலைவர் ரவி, செயலர் மாசானம் ஆகியோர் தலைமை தாங்கினர். அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க மாவட்ட தலைவர் கற்பகம் விளக்கவுரையாற்றினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாப்பு நிவாரண நிதியாக ரூ.5000 வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர பணி வழங்கி முழு ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் உதவித் தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாலு, சரவணன், முருகன் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

சேரன்மாதேவி- சிவகிரி

இதேபோல் சேரன்மாதேவியில் மாவட்ட தலைவர் செல்வ சுந்தரி, துணை தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் ராமசுப்பு, நிர்வாக கமிட்டி செயல்வீரர்கள் சுப்பிரமணியன், கருப்பையா, ரவீந்திரநாத், பாரதி சக்திவேல், போக்குவரத்து துறையை சேர்ந்த அமுல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்