சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மூதாட்டி பலி
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மூதாட்டி பலியானார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த 68 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்ததாலும், நுரையீரலில் தொற்று ஏற்பட்டு இருந்ததாலும் அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரிவித்தனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இதுவரை கொரோனா நோயாளிகள்6 பேர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.