16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-07-15 01:54 GMT
போத்தனூர்,

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கிரிக்கெட் விளையாடுவதற்காக அந்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு செல்வது வழக்கம்.

அப்போது அதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கும், மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அந்த சிறுமியை தனது நண்பரின் வீட்டிற்கு கடத்தி சென்றுள்ளார்.

இதற்கிடையில் தங்களது மகளை காணாததால் அதிர்ச்சிக்குள்ளான, சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மணிகண்டன் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, போலீசார் மணிகண்டனை கைது செய்து, சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் மணிகண்டன் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்