சுருக்குமடி வலை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்த மண்டபத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

நாகையில் சுருக்குமடி வலை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்த மண்டபத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-18 02:07 GMT
நாகப்பட்டினம்,

கடலில் மீன்பிடிக்க சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் சிலர் தடையை மீறி சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகிறார்கள். நாகை மாவட்டத்தில் மீன்பிடிப்பதற்கு சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பு மீனவர்களும், பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு மீனவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக இரு தரப்பு மீனவர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். இதனால் மீனவ கிராமங்கள் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் கடலோர மீனவ கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுருக்குமடி வலை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி இந்துமதி தலைமை தாங்கினார்.

முற்றுகை போராட்டம்

சுருக்குமடி வலைகளை பயன்படுத்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து பிரதிநிதிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 9 மணி வரை நீடித்தது.

இந்த நிலையில் கூட்டம் நடந்த தனியார் திருமண மண்டபத்தின் வெளியே காத்திருந்த சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள், பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காலையில் இருந்து பல மணி நேரமாக காத்திருக்கிறோம், எனவே உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்