பட்டிவீரன்பட்டி அருகே, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-07-22 04:45 GMT
பட்டிவீரன்பட்டி,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் அயூப்கான். இவரது மனைவி நஜீமாபீவி(வயது 45). இவர்களது மகன் நஜீப்ரகுமான். நேற்று செம்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்விற்காக உத்தமபாளையத்திலிருந்து நஜீமாபீவி, அவரது மகன் நஜீப்ரகுமான் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். மோட்டார்சைக்கிளை நஜீப்ரகுமான் ஓட்டினார்.

பின்னர் அவர்கள் சித்தையன்கோட்டையில் நடந்த துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு உத்தமபாளையத்துக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். வழியில் பட்டிவீரன்பட்டி அருகே லட்சுமிபுரம் சுங்கசாவடியில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் ஏறியபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நஜீமாபீவி திடீரென நிலைதடுமாறி கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே நஜீமாபீவி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்