பல்லடம் அருகே, லாரி-ஸ்கூட்டர் மோதல்; 2 பேர் பலி

பல்லடம் அருகே ஸ்கூட்டரில் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-07-26 06:00 GMT
பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பன்பாளையம் பிரிவை அடுத்துள்ள பல்லடம்-உடுமலை மெயின் ரோட்டில் பல்லடத்தில் இருந்து லாரி ஒன்று பல்லடம் நோக்கிச்சென்ற ஒரு மோட்டார்சைக்கிளில் மோதியது. பின்னர் நிலை தடுமாறிய லாரி எதிரே 2 பேர் வந்த ஸ்கூட்டரில் மோதி இழுத்து சென்று அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியின் அடியில் ஸ்கூட்டர் சிக்கியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த பாலா (வயது 45), மணி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் கிரேன் மூலம் லாரியை தூக்கி நிறுத்தி விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரியை ஓட்டி வந்த குடிமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் (27) லேசான காயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த உடுமலை முக்கோணத்தை சேர்ந்த நவீன்குமார் (24) லேசான காயம் அடைந்தார். அவர்கள் இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த காமநாயக்கன்பாளையம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் மீது அந்த வழியே வந்த மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் லேசான காயமடைந்த அவரை போலீசார் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்