வாடகை வாகன தகுதிச்சான்று பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் கலெக்டரிடம், டிரைவர்கள் மனு

வாடகை வாகன தகுதி சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-07-29 23:42 GMT
நெல்லை,

தமிழ்நாடு மேக்சி கேப் மற்றும் கார்ஸ் ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்க நெல்லை மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துராஜ் தலைமையில் பொருளாளர் கண்ணன் மற்றும் டிரைவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் ஊரடங்கால் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் கார் டிரைவர்களுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வாடகை வாகன தகுதிச்சான்று பெறும் கால அவகாசத்தை வருகிற டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும், காப்பீட்டுத்தொகை செலுத்தும் கால அவகாசத்தையும் இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க வேண்டும்.

தனிவாரியம் அமைக்க வேண்டும்

சாலை வரியையும் ரத்து செய்ய வேண்டும், வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். விபத்தில் உயிரிழக்கும் டிரைவர்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் கார்களுக்கு மாத தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பணம் கட்டவில்லை என்றால், அதிக வட்டி விதிக்கப்படுகிறது. அதை ரத்து செய்ய வேண்டும்.

வாடகை கார்களுக்கு இ-பாஸ் தளர்வு செய்ய வேண்டும். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பேரிடர் இழப்பு தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்