மதுரையில் கொரோனாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தொட்டது புதிதாக 225 பேருக்கு நோய் தொற்று

மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தொட்டது. நேற்று புதிதாக 225 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-07-30 02:24 GMT
மதுரை,

மதுரையில் நேற்று புதிதாக 225பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 290 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 20 பேர் பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், ஒரு கர்ப்பிணிக்கும், சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டவர்கள் என 72 பேர் உள்பட மொத்தம் 225 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல் 80-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள்.

8 ஆயிரத்தை தொட்டது

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 2,392 ஆக உயர்ந்திருக்கிறது.

நேற்று காலை நிலவரப்படி குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 995 ஆக இருந்தது. இந்தநிலையில் மாலையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் மதுரையில் கொரோனா வில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்து இருக்கிறது.

மேலும் 9 பேர் உயிரிழப்பு

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் வரிசையில் நேற்றும் 9 பேர் உயிரிழந்தனர். அவர்கள் 43,48,57 வயது பெண்கள், 65, 73 வயது மூதாட்டிகள், 45,44,50 வயது ஆண்கள், 65 வயது முதியவர் ஆவர். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 231 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்