சாத்தான்குளம் அருகே ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணிடம் 9½ பவுன் நகை பறிப்பு

சாத்தான்குளம் அருகே ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணிடம் 9½ பவுன் நகையை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-07-31 18:36 GMT
சாத்தான்குளம்,

தட்டார்மடம் அருகே உள்ள வடக்கு நரையன்குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சென்னையில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி பெனிட்டா (வயது 25). கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சாத்தான்குளம் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்காக, பெனிட்டா தனது ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார். அப்போது அவர் தன்னுடைய தங்கை ஜெனிதாவையும் அழைத்து சென்றார். அவர்கள் 2 பேரும் சாத்தான்குளத்தில் காய்கறிகளை வாங்கி விட்டு, ஸ்கூட்டரில் வடக்கு நரையன்குடியிருப்புக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

9½ பவுன் நகை பறிப்பு

சாத்தான்குளம் அருகே சுப்பிரமணியபுரம் காட்டு பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோவில் அருகில் சென்றபோது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று, ஸ்கூட்டரில் வந்த பெனிட்டா, ஜெனிதா ஆகியோரை வழிமறித்து, அரிவாளைக் காட்டி மிரட்டினர்.

பின்னர் பெனிட்டா கழுத்தில் அணிந்து இருந்த 9½ பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்