3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெங்களூரு மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கமல்பந்த் நியமனம்

கர்நாடகத்தில் நேற்று 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த பாஸ்கர்ராவை இடமாற்றம் செய்ததுடன், புதிய கமிஷனராக கமல்பந்தை நியமித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-07-31 23:02 GMT
பெங்களூரு,

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக இருந்து வந்தவர் பாஸ்கர்ராவ். இவர், கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் போலீஸ் கமிஷனராக இருந்த அலோக்குமாரை இடமாற்றம் செய்துவிட்டு புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டு இருந்தார். நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) போலீஸ் கமிஷனராக பாஸ்கர்ராவ் பதவி ஏற்று ஒரு ஆண்டை நிறைவு செய்வதாக இருந்தது. அதே நேரத்தில் பாஸ்கர்ராவை பணி இடமாற்றம் செய்துவிட்டு புதிய போலீஸ் கமிஷனராக கமல்பந்தை நியமிக்கவும் அரசு திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டது.

அதன்படி, போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனராக கமல்பந்தை நியமித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகத்தில் நேற்று 3 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

போலீஸ் கமிஷனராககமல்பந்த் நியமனம்

அதாவது கர்நாடக மாநில உளவுப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த கமல்பந்த், அதில் இருந்து மாற்றப்பட்டு பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பாஸ்கர்ராவ், உள்நாட்டு பாதுகாப்பு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கர்நாடக மாநில உளவுப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக தயானந்தை நியமித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள கமல்பந்த் 1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். ஏற்கனவே பெங்களூருவில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய அனுபவம் கமல்பந்திற்கு உள்ளது. பெங்களூரு புதிய போலீஸ் கமிஷனர் கமல்பந்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்