தூத்துக்குடியில் விநாயகர் சிலை தயாரிப்பு பாதிப்பு

தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-08-02 22:15 GMT
தூத்துக்குடி,

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆண்டு தோறும் ஏராளமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வது வழக்கம். தூத்துக்குடி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, ஊர்வலமாக கடலில் கொண்டு சென்று கரைப்பார்கள்.

இந்த விநாயகர் சிலைகளை செய்வதற்காக தூத்துக்குடி அருகே வெளிமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபடுவார்கள். விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே பெரிய சிலைகளை செய்வதற்கு ஏராளமானோர், அமைப்பினர் ஆர்டர் கொடுப்பது வழக்கம்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால் இதுவரை பெரிய விநாயகர் சிலைகள் செய்வதற்காக யாரும் ஆர்டர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெளி மாநில தொழிலாளர்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை மட்டும் செய்து வண்ணம் தீட்டி விற்பனைக்காக வைத்து உள்ளனர்.

இந்த சிலைகளை மக்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்வதற்காக வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. இதனால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்