புதிதாக 168 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது மேலும் ஒரு மூதாட்டி உயிரிழப்பு

புதுவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தொற்றால் உயிரிழந்தார்.

Update: 2020-08-04 20:17 GMT
புதுச்சேரி,

புதுவையில் தொடக்கத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பதும் அதிகமாகி வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்தில் நேற்று முன்தினம் 812 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதுவையில் 163 பேர், காரைக்காலில் 5 பேர் என மொத்தம் 168 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 46 பேர், ஜிப்மரில் 52 பேர், கொரோனா கேர் சென்டரில் 2 பேர், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 5 பேர் என சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மட்டுமின்றி கொரோனா அறிகுறியுடன் 63 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

4 ஆயிரத்தை தாண்டியது

கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 31 பேர், ஜிப்மரில் 11 பேர், கொரோனா கேர் சென்டர் 40 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 11 பேர் என மொத்தம் 96 பேர் நேற்று கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். நேற்று ஜிப்மரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெத்துசெட்டிபேட்டையை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியானார். இவருடன் சேர்த்து புதுவையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 42 ஆயிரத்து 332 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 4 ஆயிரத்து 146 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,552 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 2 ஆயிரத்து 537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 369 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்