வேலூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கோட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-08-05 16:43 GMT
வேலூர்,

வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கோட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் பழனி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன், டாஸ்மாக் ஊழியர்கள் சங்க துணைத்தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு தரமான கையுறை, முககவசம், கிருமிநாசினி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை உடனடியாக வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும், மருத்துவ சிகிச்சைக்கான உச்சவரம்பை நீக்கி முழுதொகையையும் வழங்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் அளித்தனர்.

மேலும் செய்திகள்