தாயை அடித்து கொன்ற 2 மகன்கள் கைது

ஈரோட்டில் தாயை அடித்து கொன்ற 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-08-07 03:19 GMT
ஈரோடு, 

ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சரோஜா (வயது 48). கூலித்தொழிலாளி. இவர்களுக்கு விக்னேஷ் (27), அருண்குமார் (23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை செய்து வருகிறார்கள். கணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கடந்த 4-ந் தேதி நள்ளிரவில் விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் குடிபோதையில் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை எடுத்து செலவு செய்த சரோஜாவை 2 மகன்களும் கண்டித்து உள்ளனர். இதில் அவர்களுக்கும், சரோஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த விக்னேசும், அருண்குமாரும் இரும்பு கம்பியை எடுத்து சரோஜாவை தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் அலறிய சரோஜாவின் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் சரோஜாவை அவரது 2 மகன்களும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு தனியார் ஆம்புலன்சில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

இதற்கிடையே சரோஜா இறந்ததால், அவரது உடலை சூரம்பட்டி வலசு மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் மாலை மயானத்துக்கு சென்றனர். அங்கு வருவாய்த்துறையினரின் முன்னிலையில் சரோஜாவின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரோஜாவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட விக்னேஷ், அருண்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சரோஜாவை 2 மகன்களும் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றிய போலீசார், தாயை அடித்து கொன்றதாக விக்னேஷ், அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்