ஈரோட்டில் கனி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணி தீவிரம்

ஈரோட்டில் கனி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2020-08-07 03:23 GMT
ஈரோடு, 

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் கனி மார்க்கெட் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தினசரி கடைகளும், 1,250-க்கும் மேற்பட்ட வார ஜவுளி கடைகளும் செயல்பட்டு வந்தன. ஜவுளிகள் விலை குறைவாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து ஜவுளிகள் வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் நவீன ஜவுளி வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ.51 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கனி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து புதிதாக நவீன ஜவுளி வணிக வளாக கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டிடம் கட்டும் பணி மெதுவாக நடந்து வந்தது. இந்த நிலையில் கட்டிடம் கட்டும் பணியை விரைந்து முடிப்பதற்காக தற்போது பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

புதிதாக கட்டப்பட உள்ள நவீன ஜவுளி வணிக வளாகம் 3 மாடிகள் கொண்டது. மொத்தம் 292 கடைகள் கட்டப்பட உள்ளன. கார், மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு வசதியாக வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட உள்ளன. மேலும் வணிக வளாகத்தில் லிப்ட் வசதிகள், அவசரகால படிக்கட்டு, திறந்த வெளி படிக்கட்டு, நகரும் படிக்கட்டு போன்ற வசதிகளும் செய்யப்பட உள்ளன.

மேலும் செய்திகள்