முகநூலில் வீடியோ பதிவிட்டு போஜ்புரி நடிகை தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை

முகநூலில் வீடியோ பதிவிட்டு போஜ்புரி நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-08-07 20:18 GMT
வசாய்,

மும்பையை அடுத்த மிராரோட்டில் உள்ள மகாடா காலனி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அனுபமா பதாக்(வயது40). பீகாரை சேர்ந்த இவர் மும்பை வந்து போஜ்புரி படங்களிலும், டி.வி. நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது கணவர் வெளியே சென்ற நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்யும் முன் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.

பேஸ்புக்கில் வீடியோ

மேலும் அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவேற்றம் செய்து இருந்தார். அதில், யாரை தான் நம்புவது என்று கூறியிருந்தார். அவரது இரு சக்கர வாகனத்தை வாங்கிச்சென்ற நண்பர் ஒருவர் அதனை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்ததாகவும் தெரிகிறது. நம்பிக்கை துரோகம் மற்றும் நிதி நெருக்கடி ஆகிய பிரச்சினைகளில் மனஉளைச்சல் அடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவரது 15 வயது மகள் கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

டி.வி. நடிகர் சமீர் சர்மா சமீபத்தில் வீட்டில் பிணமாக கிடந்தார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை, அவரது முன்னாள் மானேஜர் திஷா சாலியன் தற்கொலை என திரையுலகம் கதிகலங்கி நிற்கும் வேளையில் நடிகை அனுபமா பதாக்கும் தற்கொலை செய்து இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உளள்து.

மேலும் செய்திகள்