வேலூரில் கஞ்சா கடத்திய குடியாத்தத்தை சேர்ந்த 4 பேர் கைது 6 கிலோ கஞ்சா, 4 மோட்டார்சைக்கிள் பறிமுதல்

வேலூரில் கஞ்சா கடத்திய குடியாத்தத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 4 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-08-08 00:35 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து சிலர் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து கஞ்சா விற்பனையை தடுக்க அவரது உத்தரவின் பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் சைதாப்பேட்டை பகுதியில் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

அதில் அவர்கள், குடியாத்தம் தாலுகா சந்தைபேட்டையை சேர்ந்த தினேஷ்குமார் என்ற அமாவாசை (வயது 32), பெரும்பாடி சாலையை சேர்ந்த விக்னேஷ் (23), கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த இம்ரான் (24), கோபாலபுரத்தை சேர்ந்த கலீம் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள், வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த சவுகத் என்பவருக்கு விற்க ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மற்றும் அவர்கள் வைத்திருந்த 6 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வலைவீச்சு

போலீசார் கூறுகையில், இவர்கள் சவுகத் என்பவரிடம் விற்க கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். சவுகத் என்பவர் வேலூர் பகுதிகளில் கஞ்சாவை விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என்றனர்.

மேலும் செய்திகள்