மேலும் 4 பேர் சாவு: குமரியில் கொரோனாவுக்கு பலி 79 ஆக உயர்வு

குமரி மாவட்டத்தில் மேலும் 4 பேர் இறந்ததை தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-08-08 01:10 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தினமும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 முதல் 150-க்கும் மேலாக உள்ளது. அதோடு பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

நேற்று முன்தினம் வரை 75 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது.

அதாவது நெல்லை மாவட்டம் கூட்டப்பனை பகுதியை சேர்ந்த 43 வயது பெண் கடந்த 1-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 74 வயது மூதாட்டிக்கு கடந்த 4-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த 70 வயது ஆண், குமரி மாவட்டம் ராமவர்மபுரம் பகுதியை சேர்ந்த 61 வயது ஆண் என 4 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், கொரோனா கவனிப்பு மையங்களிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 580 ஆக இருந்தது. நேற்று புதிதாக 122 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதையும் சேர்த்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 702 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்