செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 483 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-10 20:22 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 483 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இதுவரை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை எட்டியது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கண்ணதாசன் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவன், 39 வயது பெண், 48 வயது ஆண் உள்பட 36 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கண்டிகை பஜனை கோவில் தெருவை சேர்ந்த 39 வயது பெண், 63 வயது மூதாட்டி உள்பட 15 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள அடுக்குமாடியில் வசிக்கும் 11 பேர், மண்ணிவாக்கம் திருவள்ளுர் தெருவை சேர்ந்த 11 வயது, 14 வயது சிறுமிகள் உள்பட 71 பேர் ஆகியோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 332 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 117 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 312 ஆக உயர்ந்தது. 2,903 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 20, 25 வயதுடைய வாலிபர்கள், 21 வயது பெண், மாடம்பாக்கம் திருத்தவெளி பகுதியை சேர்ந்த 53 வயது ஆண், ஆதனூர் பகுதியை சேர்ந்த 23, 49 வயதுடைய ஆண்கள், சோமங்கலம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர், 57 வயதுடைய ஆண், நல்லூர் பகுதியை சேர்ந்த 17 மற்றும் 45 வயதுடைய ஆண்கள் மற்றும் ஒரகடம் பகுதியை சேர்ந்த 20, 22 வயது வாலிபர்கள் உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 310 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 249 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்ததால் பலியானவர்கள் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 728 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 19 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 28 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 399 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 17ஆயிரத்து 340 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் 13 ஆயிரத்து 551 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3 ஆயிரத்து 499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 4 பேர் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 290 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்