விநாயகர் சிலைகளை கரைக்க மும்பையில் வீடு தேடி வரும் செயற்கை குளம் மாநகராட்சி தகவல்

மும்பையில் விநாயகர் சிலைகளை கரைக்க பொதுமக்களின் வீடு தேடி வரும் நடமாடும் செயற்கை குளம் குறித்து மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது.

Update: 2020-08-24 00:04 GMT
மும்பை, 

மும்பையில் நேற்று முன்தினம் 11 நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்கியது. நேற்று பொதுமக்களில் பலர் வீடுகளில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை 1½ நாள் பூஜைக்கு பிறகு கரைத்தனர்.

கொரோனா பிரச்சினை காரணமாக சிலைகளை கரைக்க பொது மக்கள் கடற்கரைகளில் கூடுவதை தவிர்க்க மும்பை மாநகராட்சி சார்பில் பல இடங்களில் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்கள் நேரடியாக அந்த குளங்களில் சிலைகளை கரைக்க முடியாது. மாநகராட்சியினர் பொதுமக்களிடம் இருந்து சிலைகளை வாங்கி செயற்கை குளத்தில் கரைப்பார்கள்.

தாராவி, தாதர், மாகிம் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி தாதரில் 4 இடங்களிலும், மாகிமில் 3 இடங்களிலும், தாராவியில் 7 இடங்களிலும் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீடு தேடி வரும் குளம்

அதன் விவரம் வருமாறு:-

தாதர்:- சிவாஜி பார்க் எஸ்.வி.எஸ். ரோடு முனிசிபல் கிரந்தா பவன், கோகலே ரோடு ஜாகாதேவி கோவில் அருகில், எஸ்.கே. போஸ்லே ரோடு சவுத்ரி வாடி, ரானடே ரோடு டி.சில்வா உயர்நிலைப்பள்ளி.

மாகிம்:- மிருதுங்கசார்யா கிரவுன்ட் காஸ்வே, பி.என். கோட்னிஸ் ரோடு சிவாஜி பார்க் தீயணைப்பு நிலையம், திகே மாநகராட்சி பூங்கா எதிரில் உள்ள பார்சி மைதானம்.

தாராவி:- சந்த்ரோகிதாஸ் ரோடு பம்பிங் ஸ்டேசன் கிரவுன்ட், 90 அடிசாலையில் உள்ள சிவ்ராஜ் மைதானம், சாகுநகர் மைதானம், கும்பர்வாடா வைபவ் குடியிருப்பு, சாஸ்திரி நகர், தாராவி போலீஸ் நிலையம், சந்த்ரோகிதாஸ் ரோடு கல்பட்ரு குடியிருப்பு. இதேபோல மும்பையில் வீடு தேடி வரும் நடமாடும் செயற்கை குள வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஜி-வடக்கு வார்டில் இந்த வசதி கிடைக்க குடியிருப்புவாசிகள் 02224397888 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அந்த வார்டு அதிகாரி கிரன் திகாவ்கர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்