அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை கொளுத்தும் வெயிலில் காத்திருந்த மாணவிகள்

அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை கொளுத்தும் வெயிலில் காத்திருந்த மாணவிகள்.

Update: 2020-08-29 22:58 GMT
புதுக்கோட்டை,

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளில் ஆன்-லைன் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. மேலும் அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு சேர்க்கை தற்போது தெடங்கப்பட்டுள்ளது. இதன்படி புதுக்கோட்டை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதையொட்டி கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கல்லூரிக்கு வந்த மாணவிகள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களுடன் வந்த பெற்றோரும் அந்த இடத்தில் காத்திருந்தனர். அவர்கள் அமருவதற்கு இட வசதி இல்லாமல் அருகில் இருந்த பயணிகள் நிழற்குடையிலும், தடுப்புச்சுவரிலும் அமர்ந்திருந்தனர். மேலும் கொளுத்தும் வெயிலில் நின்றபடி மாணவிகள் பலர் காத்திருந்தனர். ஒவ்வொரு பாடவாரியாக மாணவிகளை அழைத்து சேர்க்கை நடைபெற்றது. இதனால் மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அமரும் வகையில் கல்லூரியின் உள்ளே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் அந்த வழியாக ரோந்து சென்ற டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு முக கவசங்களை வழங்கி, அதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்