வரதட்சணை கொடுமையால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை கணவர், மாமியார் கைது

வரதட்சணை கொடுமையால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-08-30 01:35 GMT
ஆவடி,

ஆவடி காமராஜர் நகர் பாரதி தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). மத்திய அரசு ஊழியர். இவருடைய மனைவி விமலா (28). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 09-12-2018 அன்று திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு முத்துக்குமார் மற்றும் அவரது தாயார் கன்னியம்மாள் (70) ஆகியோர் அடிக்கடி விமலாவிடம் வேலையை விட்டு விடுமாறும், வரதட்சணையாக பணம் மற்றும் நகை கேட்டும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த விமலா, நேற்று காலை வீட்டின் படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார், தூக்கில் தொங்கிய விமலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி விமலாவின் தந்தை பழனி அளித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி விமலாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் முத்துக்குமார் மற்றும் மாமியார் கன்னியம்மாள் ஆகிய இருவரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.

இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

மேலும் செய்திகள்