மயிலாடுதுறையில் வாலிபர் கொலை: வேதாரண்யம் கோர்ட்டில் ஒருவர் சரண்

மயிலாடுதுறையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் தேடிய ஒருவர் வேதாரண்யம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2020-08-31 22:00 GMT
வேதாரண்யம் , 

மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை கன்னித்தோப்பை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் விஜய்(வயது24). இவர் மோட்டார் சைக்கிளில் மாப்படுகை சாலையில் சென்ற போது அந்த வழியாக நடந்து சென்ற மனோகர்(50) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனோகர் தரப்பினர் விஜய்யை கத்தியால் குத்தினர். இதில் குடல் சரிந்து படுகாயமடைந்த விஜய் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகர், அருவருடைய மகன்கள் செல்வமனோ, அன்புசெல்வன், சுந்தரராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் மயிலாடுதுறை மாப்படுகை பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகன் கார்த்திக்(36) உள்பட 10 பேரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று வேதாரண்யம் கோர்ட்டில் கார்த்திக் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி லெசி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கார்த்திக் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்