நெல்லையில் அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்ய முடியாததால் பயணிகள் அவதி

நெல்லையில் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததால், பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2020-09-04 22:10 GMT
நெல்லை,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்ட பஸ் போக்குவரத்து கடந்த 1-ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது மாவட்டங்களுக்கு உள்ளேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு இடையே, மாநிலம் முழுவதும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுக்கு பிறகு அரசு விரைவு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களே இயக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைகளில் உள்ள பஸ்களை தொழிலாளர்கள் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து தயாராக வைத்தனர்.

டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடல்

தொடர்ந்து அரசு விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது. நெல்லையில் சந்திப்பு பஸ் நிலையம், எம்.ஜி.ஆர். புதிய பஸ் நிலையம் ஆகிய 2 இடங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வந்தன. இதில் சந்திப்பு பஸ் நிலையம் இடிக்கப்பட்டு, நவீன முறையில் கட்டப்படுவதால், அங்கிருந்த முன்பதிவு மையம் அகற்றப்பட்டது.

இதேபோன்று நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்கள் சீரமைப்பு, அடுக்குமாடி வணிக வளாகம், சைக்கிள் ஸ்டாண்டு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்குள்ள பிளாட்பாரங்கள் தகரத்தால் அடைக்கப்பட்டு உள்ளது. எனவே அங்குள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையமும் மூடப்பட்டு இருக்கிறது.

இதனால் நேற்று காலை டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு சென்ற பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பியதால் அவதி அடைந்தனர். இதையடுத்து வெளியூர் செல்ல விரும்புவோர், அரசு விரைவு போக்குவரத்து கழக இணையதள முகவரியில் முன்பதிவு செய்யுமாறு போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.

எங்கிருந்து புறப்படும்?

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், தற்போது புறநகர் பஸ்கள் அருகில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன. அங்கு போதிய இடவசதி இல்லாததால், நாளை மறுநாள் பஸ் போக்குவரத்து மற்றும் விரைவு பஸ்களை எங்கிருந்து இயக்குவது என்பது தொடர்பாக, நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

நெல்லை புதிய பஸ் நிலைய வளாகத்தில் 4-வது பிளாட்பாரம் காலியாக உள்ளது. அங்கிருந்துதான் எப்போதும் அரசு விரைவு பஸ்கள் புறப்படும். எனவே நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலையில் இருந்து 4-வது பிளாட்பாரத்தில் விரைவு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டன. அந்த வழியாக டவுன் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்