நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 6 பேர் கைது

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்தனர்.

Update: 2020-09-06 23:54 GMT
நெல்லை,

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூர் உகந்தான்பட்டி விலக்கு பகுதியில் நேற்று அதிகாலையில் சீதபற்பநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்கள், ஒரு லோடு ஆட்டோ ஆகியவற்றை நிறுத்தினர். பின்னர் அந்த வாகனங்களில் இருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், வாகனங்களை சோதனை செய்தபோது, அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனால் 3 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

6 பேர் கைது

விசாரணையில், அவர்கள் முக்கூடல் அருகே பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த மூக்காண்டி (வயது 48), பாவூர்சத்திரத்தை சேர்ந்த செல்வம் (30), பேட்டையை சேர்ந்த செய்யது அலி (42), காசிம் மைதீன் (40), அப்துல் ரகீம் (27), ஜின்னா (28) என்பதும், அவர்கள் நெல்லையை அடுத்த பேட்டை பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து, நெல்லை மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

5 டன் ரேஷன் அரிசி

இதேபோல் பாளையங்கோட்டை திம்மராஜபுரம் அருகே நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தியபோது, அதில் 5 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த லாரியில் இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகளில் இருந்த ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்