தென்காசி அருகே பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

தென்காசி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற ஆட்டோ டிரைவரை, புகார் கொடுத்த 4 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-09 16:43 GMT
தென்காசி,

தென்காசி அருகே இலஞ்சியில் தென்காசி மெயின் ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இதன் அருகில் இந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கியின் மேலாளர் முத்துமாரி, குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வங்கியின் முன்புறம் உள்ள கண்காணிப்பு கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டிருந்தன.

கொள்ளை முயற்சி

ஏ.டி.எம். எந்திரத்துக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த பதிவில், மர்ம நபர் ஒருவர் கைலி மற்றும் டீ-சர்ட் அணிந்து கொண்டு முகத்தில் துணியை கட்டியபடி ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைகிறார். அதன் ஷட்டரை உட்புறமாக அடைக்கிறார். பின்னர் அதனுள் இருக்கும் கண்காணிப்பு கேமராவை கல்லை எறிந்து உடைக்க முயற்சிக்கிறார். ஆனால், முடியவில்லை.

பின்னர் பணத்தை கொள்ளையடிக்க ஒரு பெரிய கல்லை எடுத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கிறார். அது சிறிதளவு சேதமடைந்தது. ஆனால், முழுமையாக உடைக்க முடியவில்லை. இதனால் அதில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

போலீசார் விசாரணை

இதை பார்வையிட்ட இன்ஸ்பெக்டர் சுரேஷ், அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் டீ-சர்ட் அணிந்து அதற்கு மேல் வேறு சட்டையை அணிந்து இருந்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவமும், அவரது உருவமும் ஓரளவிற்கு ஒத்துப்போனது.

மேலும் அவரது சட்டைக்கு உள்ளே அணிந்திருந்த டீ-சர்ட் நிறம், கண்காணிப்பு கேமராவில் பதிவான டீ-சர்ட் போலவே இருந்தது. உடனே இன்ஸ்பெக்டர் சுரேஷ், அந்த வாலிபரை பிடித்து சட்டையை கழற்ற சொன்னார். அதன்படி, சட்டை கழற்றியபோது, அவர் அணிந்திருந்த டி-சர்ட்டின் பின்புறம் எழுதியிருந்த ஆங்கில எழுத்துக்களும், கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆங்கில எழுத்துக்களும் ஒன்று போல இருந்தது.

ஆட்டோ டிரைவர் கைது

இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இலஞ்சி வேளாளர் தெருவை சேர்ந்த இசக்கி என்பவரது மகன் முத்து (வயது 19) என்பதும், அந்த வங்கியின் அருகில் ஆட்டோ ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துவிட்டு வங்கியின் அருகிலேயே உள்ள தனது ஆட்டோவில் படுத்து உறங்கிவிட்டார். காலையில் ஒன்றும் தெரியாததுபோல் போலீசார் விசாரணை நடத்தியபோது அங்கேயே நின்று கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். கைதான முத்து ஊரடங்கு காலத்தில் போலீசாருக்கு போக்குவரத்து பணியில் உதவியாக இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் புகார் கொடுக்கப்பட்ட 4 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்