திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

விக்கிரமசிங்கபுரம் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2020-09-13 23:34 GMT
விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோடாரங்குளம் ஏகாம்பரம் காலனியைச் சேர்ந்தவர் பால்துரை. இவருடைய மகன் முத்து முருகன் (வயது 21). கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் மகள் காயத்ரி (19). இவர்கள் 2 பேரும் காதலித்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் காயத்ரி கணவரின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டில் தனிக்குடித்தனமாக இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் காயத்ரி வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், விக்கிரமசிங்கபுரம் போலீசார் விரைந்து சென்று, காயத்ரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால், சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள் மேல்விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்