திண்டுக்கல் அருகே, 2 குழந்தைகளின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவி - வீட்டுக்கு தீ வைப்பு

திண்டுக்கல் அருகே 2 குழந்தைகளின் தந்தையுடன் கல்லூரி மாணவி ஓட்டம் பிடித்தார்.

Update: 2020-09-14 06:00 GMT
சின்னாளப்பட்டி, 

திண்டுக்கல் அருகே உள்ள செட்டியபட்டி நண்பர்கள்புரம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 36). லாரி டிரைவர். இவர், அதே பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு, திருமணமாகி மூக்கம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் 2 பேரும், கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். 2 மகள்களும் தாயுடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கருப்புசாமிக்கும், 18 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவருடன் கருப்புசாமி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த மாணவியை அழைத்து கொண்டு கருப்புசாமி ஓட்டம் பிடித்தார். 2 பேரும் மாயமானதை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்களுக்கும், கருப்புசாமியின் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கருப்புசாமியின் வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதுபற்றி தகவலறிந்த சின்னாளப்பட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் வீட்டின் முன்பு இருந்த ஆடு அடைக்கும் பட்டி, கோழி கூடாரம் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின.

மேலும் கருப்புசாமியின் வீட்டில் இருந்த டி.வி., கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்களையும் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பூத்தாம்பட்டியை சேர்ந்த பாண்டி (45), விஜய்பாரத் (20), மகேந்திரன் (38), விருமாண்டி (58) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்