அரசு வேலை வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகன், மகளுடன் தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல்

அரசு வேலை வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகன், மகளுடன் தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல் விடுத்தார்.

Update: 2020-09-15 01:01 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பழைய ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த ராமகிருஷ்ணனின் மனைவி முத்தமிழ்ச்செல்வி (வயது 36), தனது மகளுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருந்தார். ஆனால் கலெக்டரிடம் மனு அளிக்க அனுமதியில்லாததால், அந்த மனுவை பெட்டியில் போடுமாறு அலுவலர்கள் கூறியுள்ளனர்.

பெட்டியில் போடும் மனுவுக்கு நடவடிக்கை இருக்காது, அதனால் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று கூறியபடி, கண்ணீர் மல்க புலம்பி கொண்டிருந்தார்.

தீக்குளிப்பதை தவிர...

இது குறித்து கேட்டபோது, அவர் கூறுகையில், எனக்கு ஒரு மகள், மகன் இருக்கிறார்கள். எனது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு எந்த உதவித்தொகையும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை. கூலி வேலைக்கு செல்லும் என்னால், எனது பிள்ளைகளை வளர்ப்பதற்கும், படிக்க வைப்பதற்கும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் அரசு வேலைக்கு விண்ணப்பித்தாலும், வேலை கிடைக்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். மேலும் அரசு வேலை வழங்கக்கோரி கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்து வருகின்றேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இனிமேலும் வேலை வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் எனது மகன், மகளுடன் சேர்ந்து தீக்குளிப்பதை தவிர வேற எந்த முடிவும் எனக்கு தெரியவில்லை, என்றார்.

மேலும் செய்திகள்