ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இறந்த பெண் நோயாளியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலி திருட்டு

ஜிப்மரில் சிகிச்சை பெற்ற போது இறந்த பெண் நோயாளியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலி திருடு போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-09-15 23:24 GMT
புதுச்சேரி,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா பிரம்மதேசம் வன்னியப்பேறு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெயா. குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 13-ந் தேதி விஷம் குடித்தார். உடனே அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்துபோனார்.

ஜெயாவை அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்த போது அவரது கழுத்தில் 3½ பவுன் தாலி சங்கிலி அணிந்திருந்தார். ஆனால் அவர் இறந்த பின்னர் அவரது தாலி சங்கிலி திருடு போனது. அங்குள்ள பணியாளர்களிடம் கேட்ட போது சரியான தகவல் எதுவும் கூறவில்லை.

இது குறித்து அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் உறவினர்கள் முறையிட்ட னர். ஆனால் போலீசார் இது தொடர்பாக புகார் செய்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினர். இதனை தொடர்ந்து அவர்கள் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

ஜெயா இறந்த போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தங்க சங்கிலியை எடுத்து சென்றனரா? அல்லது நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்கள் அதை கழற்றி சென்றனரா? என்று போலீசாரும், மருத்துவமனை நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகள்