வீரசம்பலூரில், ஒரே குடும்பத்தில் கண்பார்வையற்ற 7 மாற்றுத்திறனாளிகள் - பசுமை வீடு உத்தரவு வழங்கி பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்

பார்வையற்ற 7 மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் குடும்பத்திற்கு பசுமை வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டு பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2020-09-16 09:00 GMT
சேத்துப்பட்டு, 

சேத்துப்பட்டு ஒன்றியம் பத்தியாவரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மற்றும மகன், மகள்கள் உள்பட 7 பேரும் பார்வை இழந்தவர்களாவர். இவர்களுக்கு சொந்த வீடு இல்லை. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் நேரில் சந்தித்து குடும்பத்தினர் மனு கொடுத்தனர். அவர்களது மனுவை சேத்துப்பட்டு வருவாய்த்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிசீலனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.

அவர்கள் அதனை பரிசீலனை செய்து 7 பேரும் பார்வையற்றவர்கள் என்பதையும், சொந்த வீடு இல்லாததையும் உறுதிப்படுத்தி பசுமை வீடு திட்டத்துக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் வீரசம்பலூரில் வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வீரசம்பலூருக்கு வந்த கலெக்டர் கணேசன் குடும்பத்தினருக்கு வீடு கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் சேத்துப்பட்டு ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ச்சுனன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், ரபிவுல்லா, ஒன்றிய பொறியாளர் மனோகரன், ஒதலவாடி ஊராட்சிமன்ற தலைவர் தேன்மொழி இளையபெருமாள், வீரசம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி, மாற்றுத் திறனாளிகள் பள்ளி தலைமை ஆசிரியர் லேவீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்