சிவமொக்காவில் சம்பவம்: பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது - வாலிபர் படுகாயம்

சிவமொக்காவில் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.

Update: 2020-09-17 22:30 GMT
சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா தவானந்தி கிராமத்தை சேர்ந்தவர் சரத் (வயது 22). இவர் நேற்று முன்தினம் தனது கிராமத்தில் இருந்து குப்பேகட்டேவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது குப்பேகட்டே கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது.

இதனால் நிலை தடுமாறிய அவர், மோட்டார் சைக்கிளுடன் குளத்துக்குள் பாய்ந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சரத்தை பத்திரமாக மீட்டனர்.

செல்போன் வெடித்து சிதறியதில் சரத்தின் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் அவர் சாகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெடித்து சிதறிய செல்போன் சீனா தயாரிப்பு என்றும், அது அதிக சூடாக இருந்ததால் வெடித்து சிதறியதும் தெரியவந்தது. மேலும் அந்த செல்போனை சரத், பெங்களூருவில் வாங்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஆனவட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்