மேச்சேரி அருகே கார் மோதி 2 பேர் பலி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மேச்சேரி அருகே கார் மோதி 2 பேர் பலியானார்கள். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-18 04:45 GMT
மேச்சேரி,

மேச்சேரி அருகே உள்ள பெரிய சாத்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 48). தனியார் பஸ் கண்டக்டர். அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (52). விவசாயி. இவர்கள் 2 பேரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஓமலூரில் இருந்து மேச்சேரி நோக்கி வந்தனர். மேச்சேரி-ஓமலூர் சாலையில் சாத்தப்பாடி அருகே வந்த போது எதிரே வந்த காரும்-மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சேகர், முருகன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது

இதனிடையே கார் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. விபத்து நடந்த இடத்தின் அருகில் பெட்ரோல் விற்பனை நிலையம் இருந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வந்து தீயில் எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்