விழுப்புரத்தில், அரசு பஸ்சில் சமூக இடைவெளியை மறந்து பயணம் செய்த பயணிகள் - கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

விழுப்புரத்தில் அரசு பஸ்சில் சமூக இடைவெளியை மறந்து பயணிகள் பயணம் செய்தனர். இதனால் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-09-19 06:00 GMT
விழுப்புரம், 

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.விழுப்புரம் கோட்டத்தில் மொத்தமுள்ள 3,054 பஸ்களில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்களை சேர்ந்த 10 மாவட்டங்களில் தற்போது 1,300 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களில் 60 சதவீதம் பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் அனைத்து பயணிகளும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருகிற ஒரு சில பஸ்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. பஸ்களில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒவ்வொரு பஸ்சிலும் 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் 2 பேரும், 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவரும் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும், அதாவது 52 இருக்கைகள் அடங்கிய பஸ்சில் 32 பயணிகளும், 44 இருக்கைகள் அடங்கிய டவுன் பஸ்களில் 26 பயணிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆனால் ஒரு சில பஸ்களில் 50 பயணிகள் வரை பயணம் செய்வதை பார்க்க முடிந்தது. குறிப்பாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ்சில் பயணிகள் சமூக இடைவெளியின்றி நெருக்கமாக அமர்ந்து பயணம் செய்தனர்.

இவ்வாறு பஸ்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக சென்றால் கொரோனா நோய் தொற்றுக்கு வழிவகுத்து விடும் என்று பயணிகள் அச்சம் கொள்கின்றனர். எனவே இதுபோல் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்