திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீண்டும் தீ விபத்து: வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்; 183 பேர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீண்டும் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. உள்ளிருப்பு போராட்டம் நடத்திய 183 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-09-20 01:57 GMT
திருச்சி,

திருச்சி காந்தி மார்க்கெட் நகரின் மையப்பகுதியில் இயங்கி வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. மொத்த வியாபாரம் இரவு வேளையில் மட்டும் பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் இயங்கி வருகிறது.

காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி பல்வேறு போராட்டங்களை வியாபாரிகள் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி என்பவர், காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் வருகிற அக்டோபர் 13-ந் தேதிவரை காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4-வது முறையாக தீ விபத்து

காந்தி மார்க்கெட் மூடப்பட்டிருந்தாலும் அங்கு ஏற்கனவே 3 முறை தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மூடப்பட்ட காந்தி மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்று தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

மேலும் காந்தி மார்க்கெட் மூடப்பட்டதால்தான், அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது என்றும், எனவே, அதை உடனடியாக திறக்க வேண்டும் எனக்கூறி காந்தி மார்க்கெட்டின் 6-வது கேட் பகுதியில் வியாபாரிகள் திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, மாவட்ட தலைவர் ஸ்ரீதர், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன், பா.ஜ.க. மண்டல தலைவர் ராஜசேகரன் மற்றும் திரளான வியாபாரிகள் 6-வது கேட் பகுதியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, போலீஸ் உதவி கமிஷனர் ரவி அபிராம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. திருச்சி காந்தி மார்க்கெட்-தஞ்சை சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

குண்டு கட்டாக கைது

அப்போது போலீஸ் தரப்பில், காந்தி மார்க்கெட் திறக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், கோர்ட்டு உத்தரவை மீறி காந்தி மார்க்கெட்டை திறக்க முடியாது என்றும், எனவே, போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், வியாபாரிகள் தரப்பில், கோர்ட்டு தடையை விலக்கி காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என குரல் எழுப்பப்பட்டது.

போராட்ட களத்திற்கு திருச்சி உதவி கலெக்டர் விஸ்வநாதன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு வியாபாரிகள் தரப்பில், கலெக்டர் நேரடியாக வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை குண்டு கட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு உருவானது. பின்னர் வியாபாரிகள் 183 பேரை கைது செய்து பால க்கரை மீனாட்சி மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

வியாபாரிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. மகேஸ் பொய்யாமொழி வந்தார். அங்கு நடந்த விஷயங்களை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘காந்தி மார்க்கெட் திறப்பது குறித்து கோர்ட்டு தடை உள்ளது. எனவே, நான் மாவட்ட கலெக்டர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் தீர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன். உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்‘ என்றார்.

வெல்லமண்டி நடராஜன் உறுதி

இதற்கிடையே சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மாலையில் கைதான வியாபாரிகளை சந்திக்க சென்றார். அப்போது வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டது. ஏற்கனவே, சென்னை கோயம்பேடு மார்க்கெட் வருகிற 28-ந் தேதி திறக்கும்போது காந்தி மார்க்கெட் திறக்கப்படும் என்று அளித்த உறுதி என்னவாயிற்று? என குரல் எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் பதில் கூறுகையில், ‘தற்போது காந்தி மார்க்கெட் திறப்பதற்கான தடை உள்ளது.இது தொடர்பாக முதல்-அமைச்சருடன் சட்ட ஆலோசனை பெறப்பட்டு வருகிறது. எனவே, நிச்சயம் அந்த தடை அகற்றப்பட்டு காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறப்பதற்கு துணை நிற்பேன். காந்தி மார்க்கெட்டை எனது உயிருள்ளவரை அகற்றவிட மாட்டேன்‘ என்றார். மேலும் வியாபாரிகளை காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்களும், இதர அமைப்பினரும் சந்தித்து பேசினர்.

கலெக்டர் உறுதி

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவை வியாபாரிகள் தரப்பில் கோவிந்தராஜூலு, கமலக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது கலெக்டர் கூறுகையில், ‘காந்தி மார்க்கெட்டை முழுமையாக கள்ளிக்குடி ஒருங்கிணைந்த வணிக வளாகத்திற்கு மாற்ற அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு உழவர் குழுக்கள் மற்றும் தமிழகத்தின் உள்ள அனைத்து வியாபாரிகள் வணிகம் செய்யும் வகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதன் அடிப்படையில்தான் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்ய கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட்டை திறக்கக்கூடாது என அக்டோபர் 13-ந் தேதிவரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. அதன் பின்னர் காந்தி மார்க்கெட் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார். இதற்கிடையே கைதான வியாபாரிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்