ராஜபாளையம் அருகே, நடுரோட்டில் பெண் வெட்டிக் கொலை - சொத்து தகராறில் உறவினர் வெறிச்செயல்

ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் நடுரோட்டில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-09-20 10:15 GMT
ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆகாசம்பிள்ளை. இவரது மனைவி லீலாவதி (வயது 55). இவர் சத்திரப்பட்டியில் உள்ள மருத்துவ துணி ஏற்றுமதி ஆலையில் விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இவரது குடும்பத்திற்கு சொந்தமான சொத்துகள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்யப்பட்டதாக தெரிகிறது. அப்போது லீலாவதிக்கும், அவரது உறவினரான வாலிபர் முருகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் லீலாவதி வழக்கம் போல் இரவுப்பணிக்கு செல்வதற்காக சத்திரப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது லீலாவதியை பின் தொடர்ந்து வந்த முருகன் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் லீலாவதி அவரை தள்ளி விட்டு சென்றுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முருகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லீலாவதியின் கழுத்தில் வெட்டி உள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த லீலாவதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கீழராஜகுலராமன் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் லீலாவதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் பெண் ஒருவர் சொத்து தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்