இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்: அறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு

அறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் இருப்பவர்கள் உணவு வைக்கலாம், இல்லாதவர்கள் உணவை சாப்பிடலாம்.

Update: 2020-09-22 01:53 GMT
அறந்தாங்கி,

அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இணைந்து பசியுடன் வாடுபவர்கள் பசியாற நூதன ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி அறந்தாங்கி நகராட்சி தாலுகா ஆபீஸ் சாலையில் பொது இடத்தில் கண்ணாடி பெட்டி வைத்துள்ளனர். இந்த பெட்டியில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளும் உணவு வைக்கப்பட்டு இருக்கும்.

பசியுடன் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த உணவை எடுத்து சாப்பிடலாம். இதற்கு பணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல் வசதிப்படைத்தவர்கள் உள்பட உணவு தானம் செய்ய விரும்புபவர்கள் ஓட்டலில் வாங்கியோ அல்லது வீட்டில் சமையல் செய்து கொண்டு வந்தோ உணவு வைக்கலாம். இதனை இல்லாதவர்கள் எடுத்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

அதேநேரத்தில் கண்ணாடி பெட்டியில் உள்ள உணவை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பழைய சாப்பாடு வைக்காத வகையில் கண்காணிப்பார்கள். இந்த கண்ணாடி பெட்டியை நேற்று சமூக ஆர்வலர்கள் வைத்தனர். சமூக ஆர்வலர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் இந்த கண்ணாடி பெட்டியில் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள், ஏதாவது சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் உணவு வைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்